குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ்ப் பள்ளிக்கு வந்து மகிழ்ச்சியுடன் தமிழ் படிக்க வேண்டும் என்பது தான் எங்களது வகுப்பின் நோக்கம். இந்த வகுப்பின் முக்கிய நோக்கம், தமிழ் மொழியைக் குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமாக, எளிதாகக் கற்றுக்கொள்ள வைப்பதுதான். அவர்கள் தமிழில் பேசத் தொடங்கும்படி உற்சாகப்படுத்துவதுதான் வகுப்பின் முதன்மை இலக்கு.
உறவுகள் தொடர்பான சொற்கள் (அப்பா, அம்மா, தங்கை, அண்ணன் போன்றவை) நிறங்கள், விலங்குகள், எண்ணிக்கை, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை பாடத்திட்டத்தில் உள்ளன. குழந்தைகள் தினசரி உரையாடலின்போது பயன்படுத்தும் அடிப்படைச் சொற்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்துடன் இணைந்து, குழந்தைகள் தமிழில் திட்டப்பணிகளை செய்யும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். வகுப்புத் தோழர்களுடன் இணைந்து தமிழில் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தமிழில் கேள்விகளை எழுப்பவும், தமிழில் பேசவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சில ஆங்கில விளையாட்டுகள், தமிழ் வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, வகுப்பு நேரத்தில் அவை செயல்படுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும்போதும், வகுப்பில் உரையாடும்போதும் அவர்கள் மனதில் உள்ள கருத்துக்களைத் தமிழில் பேசுவதற்கு ஊக்கப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு வாரமும் வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. எழுத்துப் பயிற்சி, வாய்மொழிப் பயிற்சி மற்றும் உரையாடல் பயிற்சி என மூன்று பிரிவுகளில் வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் அவர்களது வீட்டு உறுப்பினர்களிடம், தமிழில் பேசும் வாய்ப்பைப் பெறுகின்றனர். வகுப்பறையில், குழந்தைகளுக்குப் பாடங்களை விளையாட்டாகவும், உரையாடலாகவும் எளிய முறையில் கற்பிக்கிறோம். மாதம் ஒருமுறை கொடுக்கப்படும் திட்டப் பணிகளை, எங்கள் வகுப்புக் குழந்தைகள் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு முடிக்கிறார்கள். இதனால் அனைத்து மாணவர்களும் தமிழை விரும்பி ஆர்வத்துடன் கற்கின்றனர். விளையாட்டுடன் கூடிய எங்களது பாடத்திட்டம் மாணவர்களுக்கு தமிழ் கற்க மிகவும் உதவியாக இருக்கிறது. மாணவர்களும் இதையேதான் விரும்புகிறார்கள். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள். இதனை எங்களது வெற்றியாக பார்க்கிறோம்.